Wednesday, 28 September 2016

கீழடி - பள்ளிச்சந்தைத்திடல்- ச.செல்வராஜ்



கீழடி பள்ளிச்சந்தைத்திடல்  - தொல்லியல் துறை நிபுணர் திரு ச. செல்வராஜ்.

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு கீழடி அகழாய்வு ஆகும். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றில் புதிய தகவல்களைப் பதிவு செய்து வருகிறது.
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு பல அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில், அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட அகழாய்வில் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. சுமார் 9,000 தொல்பொருட்களை வழங்கிய அகழாய்வு என்ற பெருமையையும், தமிழகத்தில் பண்டைய காலத்தில் சிறந்த நாகரிக வாழ்க்கை முறை இருந்ததற்கான தடயங்களையும் வெளிப்படுத்திய அகழாய்வு இதுவாகும். அடுத்து, அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட பெரிய அளவிலான அகழாய்வாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வைக் குறிப்பிடலாம்.

கீழடி அமைவிடம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில், வைகைக் கரையில் அமைந்துள்ளது கீழடி கிராமம். சிவகங்கையிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 491 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
(வைகை நதி, ராமநாதபுரம் வழியாக ஆற்றங்கரை என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு அருகில் அமைந்ததுதான் அழகன்குளம் எனும் சங்க காலப் பாண்டிய நாட்டுத் துறைமுகப்பட்டினம். இப்பகுதியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியில் துறை அகழாய்வு மேற்கொண்டு, பல அரிய தொல்பொருட்களையும், பல்வேறுவகையான அரிய மட்கலன்களையும், நாணயங்களையும், உரோமானிய மட்கலன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றுக்குப் பண்டைய துறைமுகப்பட்டினத்தையும் வணிக நகரத்தையும் வெளிக்கொணர்ந்து சுட்டிக்காட்டிய அகழாய்வு என்ற பெருமையைப் பெற்றது. அதேபோல், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கீழடி அகழாய்வும், பல அரிய தொல்பொருட்களை வழங்கிக்கொண்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினர், தமிழகத்தில் சிறப்புபெற்ற சங்க கால ஊர்கள் என 300-க்கும் மேற்பட்ட ஊர்களை, மேற்பரப்பு ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து குறித்துள்ளனர். இத்துறையினர், 1976-ம் ஆண்டு கீழடிப் பகுதியை மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு அங்கு சேகரித்த தொல்பொருட்களின் அடிப்படையில், கீழடி ஒரு  சிறப்புபெற்ற வணிகத்தலம் என்பதையும், இங்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
வரலாற்றில் கீழடி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடியைச் சுற்றிலும், மணலூர், குந்தகை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றுள், குந்தகை என்பது குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என்பதைக் குறிப்பதாகும். இவ்வூர் பாண்டிய நாட்டு மன்னனின் அரசியார் பெயரால் அமைந்ததே என்பதை, இவ்வூரில் அமைந்துள்ள அர்ஜுனேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
கீழடி அகழாய்வு
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கீழடி பள்ளிச்சந்தைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு பல அகழ்வுக்குழிகள் போடப்பட்டு அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன், மட்கலன் ஓடுகளும், சுடுமண் பொருட்களும், குறிப்பாக கட்டடப் பகுதிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பெரிய தொட்டிகள் போன்ற மட்கலன்களும், செவ்வக வடிவத் தொட்டிகளும், கட்டடப் பகுதிகளுக்கு அருகிலே வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.
தொல்பொருட்கள்
கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் காதணிகள். கல்மணிகள், அகேட், கார்னீலியன், கிரிஸ்டல், பெரில் போன்ற மணிகளும் கிடைத்துள்ளன. பள்ளம்பதித்த கூறை ஓடுகள், விளையாட்டுக் காய்கள், குறிப்பாக தந்தத்தால் ஆன தாயக்கட்டை, பகடைக் காய் மற்றும் சதுரங்கக் காய் ஒன்றும், சுடுமண் அடுப்பு, சங்கு வளையல்கள், அம்பு முனைகள், தந்தத்தால் ஆன காதணிகள் எனப் பல்வேறு தொல்பொருட்களை இவ்வகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.


நன்றி: தொல்லியல்மணி-தினமணி



கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் : கழிவுநீர் சேகரிப்பு வசதியுடன் கட்டடங்கள் : சங்க கால பொருட்கள் கண்டெடுப்பு

மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நடத்தும் அகழாய்வில், பழங்கால கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட சங்க கால பொருட்களும், அவை தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளதால், மூன்றாம் கட்ட ஆய்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, வைகை நதியின் இருகரை ஓரங்களில் நடத்திய களஆய்வுகளின் அடிப்படையில், மதுரை அருகே கீழடியில் பழம்பெரும் 'வணிக நகரம்' குறித்த தடயங்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக 2015 மார்ச் முதல் செப்டம்பர் வரை, கீழடி பள்ளிச்சந்தை திடலில் அகழாய்வை துவக்கியது. 4 மீட்டர் நீளம், 4 மீ., அகலம், 4 மீ., ஆழம் என 43 குழிகள் தோண்டி நடத்திய ஆய்வில் 1,800 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதில் வெளிநாட்டு பொருட்கள் கிடைத்ததால், மதுரை - ராமேஸ்வரம் பகுதியின் முக்கிய வணிக நகராக இப்பகுதி இருந்தது என உறுதி செய்யப்பட்டது. வைகை ஆறும் இந்த பகுதியில் ஓடியிருக்கலாம் என தெரிந்தது. இங்கு கிடைத்த பொருட்கள் பெங்களூருவில் உள்ள தொல்பொருள் ஆய்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு, தொடர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்துறையினருக்கு பெரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், கீழடி முதல்கட்ட ஆய்வில் அதிகமான பழங்கால பொருட்கள் கிடைத்ததால், 2ம் கட்ட ஆய்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 2016 ஜனவரி முதல் ஆய்வு துவங்கியது.தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடைக்காத வகையில் 3,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.புதுமையாக கட்டடங்கள், தண்ணீர் தொட்டிகள், கழிவுநீர் தொட்டி, அதற்கான இணைப்பு குழாய்கள், கட்டடங்களுக்குள் உலைகள் (அடுப்புகள்) இருந்தன. இதனால் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆச்சரியத்தில் வியந்து நிற்கின்றனர்.தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் தலைமையில் ஆய்வாளர்கள் இங்கு முகாமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நந்த கிஷோர் (தொல்பொருள் ஆய்வுத்துறை உயர்நிலை அதிகாரி): இப்பகுதியில் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்நகரம் கி.மு., 3ம் நூற்றாண்டு முதல் கி.பி.,3ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம். இது தொடர்பாக முழுஆய்வு நடத்தப்படுகிறது. அதிகமான பொருட்கள் கிடைப்பதால் 3ம் கட்ட ஆய்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் (உதவி தொல்லியல் அலுவலர்): 2ம் கட்ட ஆய்வில் 57 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 'கன்னிமண்' இருக்கும் இடம் வரை தோண்டுகிறோம். குறிப்பிட்ட ஆழத்திற்கு பின் களிமண், மணல் இருக்கிறது. இம்முறை நடக்கும் ஆய்வில் தமிழ் 'பிராமி' எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. இதில் சந்தன், முயன், சேந்தன்அததி, மாடைசி போன்ற பெயர்கள் உள்ளன. சங்க காலத்தில் கழிவுநீர் மேலாண்மையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இப்போது கட்டடங்களில் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் குழாய், கழிவுநீர் சேகரிப்பு வசதி என பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆச்சரியப்படுத்துகிறது.
வியப்பை தரும் பொருட்கள் : கார்த்திக் (கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி, முனைவர் பட்ட ஆய்வாளர்): இங்கு நடந்து வரும் முதல்கட்ட அகழாய்விலும் பணிபுரிந்தேன். தொல்லியல் எச்சங்கள் எப்படி இருக்கும், அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது உள்ளிட்ட பலவிஷயங்களை தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கும் பொருட்கள் கிடைக்கின்றன. குறிப்பாக காது அணிகள், எலும்பு அம்பு முனை, சுடுமண் முத்திரை, சுடுமண் பொம்மைகள், செப்பு பொருட்கள், தந்தத்திலான பொருட்கள், கத்தி, ஈட்டி என பொருட்கள் உள்ளன.
தீப்தி பவித்ரா (பாண்டிச்சேரி பல்கலை அகழாய்வு பயிற்சி மாணவி): அகழாய்வில் பணிபுரிவது என்பது வித்தியாசமான அனுபவம். ஒவ்வொரு பொருளும் கிடைக்கும் போது, நாமும் அந்த காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு, மகிழ்ச்சி ஏற்படுகிறது. அக்காலத்திலும் நாகரிக கட்டமைப்புடன் கூடிய வாழ்வை நம் மக்கள் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இடம் சாட்சி.
சங்க காலம் பார்க்கலாம் : பரத்குமார் (சென்னை பல்கலை தொல்லியல் துறை ஆய்வாளர்): சங்ககாலம் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். அதை இப்போது நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. அக்கால வரலாற்றை படிப்பவர்களுக்கு இந்த இடம் பாடம் நடத்தும் வகையில் இருக்கும்.
களப்பணியில் புதுமை : வசந்தகுமார் (சென்னை பல்கலை கல்வெட்டு ஆய்வாளர்): இங்கு நடந்த ஆய்வுகளில் அனைத்து பொருட்களையும், ஆய்வுப்பகுதிகளையும் வரைபடமாக தயாரித்துக் கொடுக்கிறேன். மிகவும் துல்லியமாக இவை ஆவணப் படுத்தப்படுகின்றன. இங்கு நடக்கும் களப்பணி புதுமையான அனுபவங்களை தினம் தினம் கொடுத்து வருகிறது. இன்னும் பல விஷயங்கள் இந்த பகுதியில் உள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வில் கீழடியில் கிடைத்துள்ள 3,௦௦௦ க்கும் மேற்பட்ட பொருட்கள் பெங்களூருவுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த அகழாய்வுப்பணி செப்டம்பர் வரை நடக்கும். அதன் பின் இங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும். தற்போது தினமும் பல இடங்களில் இருந்தும் தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வருகிறார்கள். இந்த பகுதியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கலாம். இப்பகுதியின் அருகே உள்ள கொந்தகை கிராமம் வரையிலான பகுதிகளில், ஆய்வுகளை தொடர்ந்தால் இன்னும் பல புதுமைகள் வெளிவரும். இந்திய தொல்லியல் ஆய்வில், கீழடிக்கு நீங்கா இடம் கிடைக்கும்.

நன்றி : (தினமலர் 25.06.2016)

Thursday, 8 September 2016


புதுச்சேரி


நம் பயணத்திற்குமுன் புதுச்சேரி பற்றிய சில வரலாற்றுப் பின்னணித் தகவல்கள்;
புதுச்சேரிவாசி ஒருவரின் பகிர்வு:

*** புதுச்சேரி கச்சேரி - 526 ***

நமது புதுச்சேரி பற்றிய அடிப்படையான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான், நம்மூர் பற்றிய தவறான பிம்பங்களை உடைத்தெறிந்து நம்மிடமிருக்கும் பெருமைமிகு விஷயங்களை பிறர்க்கு எடுத்துச் சொல்லமுடியும். இதோ, சிலக் குறிப்புகள்.

நமது புதுச்சேரி மாநிலத்தின்

விலங்கு : அணில்
பறவை : குயில்
பூ : நாகலிங்கப் பூ
மரம் : பெயில் பழ மரம்
(இதை கிராமங்களில் 'ஆத்தாப்பழ மரம் என்று சொல்கிறார்கள்)

1674 இல் ஃப்ரெஞ்சு காலணிப் பகுதியின் தலை நகரமாக அறிவிக்கப்பட்டது நமது புதுச்சேரி. 18.10.1954 இல் நம் நகராட்சியிலும், கொம்யூன்களிலும் நடைபெற்ற தேர்தலில் 170 பேர் சுதந்திரம் வேண்டுமென்றும், எட்டு பேர் வேண்டாமென்றும் வாக்களித்தனர். 01.11.1954 இல் இந்தியாவுடன் இணைந்தது புதுச்சேரி. ஆனாலும் முறைப்படியான ஒப்பந்தம் கையெழுத்தான நாளான ஆகஸ்ட் 16 அன்றே சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.  விடுதலை கால மக்கள் இயக்கத்தின் கோரிக்கையினால் நவம்பர் 1 அன்றே சுதந்திரதினம் என்றாக்கப்பட்டு ஆகஸ்ட் 16 குடியரசு தினம் என்று அறிவிக்கப்பட்டது.

07.01.1963 இல் முதல் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தது புதுச்சேரி. முதல் முதலமைச்சராக 01.06.1963 அன்று குபேர் அவர்கள் பொறுப்பேற்றார். ஒரே வருடத்தில் முதல்வாரக வெங்கடசுப்பா ரெட்டியார் பொறுப்பேற்றார். பின்னர் ஃபரூக் அவர்கள் மீண்டும் வெங்கடசுப்பா ரெட்டியார் என்று முதல் ஐந்தாண்டுகளிலேயே காங்கிரசில் முதல்வர்கள் மாறினர். முதல்வர்களை கணக்கெடுத்தால் அது ஏகத்துக்குச் செல்லும். தாறுமாறாக நம் அரசியல் கையாளப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அத்தனைக் குழப்பங்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும். முதல்வர்களைப் போல கவர்னர்களும் ஆண்டிருக்கின்றனர்.

1969 - இல் 189 நாட்களும், 1974 - இல் 62  நாட்களும், 1977 முதல் மூன்று வருடங்களும், 1983 முதல் ஒரு வருடம் 265 நாட்களும், இறுதியாக 1991 இல் 123 நாட்களும் புதுவை குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. ஐந்து வருடங்களை முடித்தவர்களில் முதலாமவர் சமீபத்திய முதல்வர் திரு.ரங்கசாமி அவர்கள் மட்டுமே. அவர் ஐந்து வருடங்கள் 20 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவதாக திரு.ஃபரூக் அவர்கள் 4 வருடங்கள் 353 நாட்களும், மூன்றாவதாக திரு.வைத்திலிங்கம் அவர்கள் 4 வருடங்கள் 314 நாட்களும் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர்.



நான்கு மாவட்டங்களைக் கொண்டது.
190 சதுர மைல் பரப்பளவு கொண்டது.
12,44,464 மக்கள் தொகை கொண்டது.

ஆட்சி மொழிகள் : தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு
இந்துக்கள் 87% பேரும், கிறித்தவர்கள் 6.2% பேரும், இஸ்லாமியர்கள் 6% பேரும் வசிக்கின்றனர்.

Treaty of Cessation 1956 இன் படி ஃப்ரெஞ்சு மொழியும் நம் அலுவல் மொழியாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி மொழியாக ஃப்ரெஞ்சு மொழி வேண்டாம் என்று முடிவெடுக்கும் வரை இது தொடரும்.

நமது நான்கு மாவட்டங்களும் சேர்த்து 45 கிமீ கடற்பகுதியைக் கொண்டிருக்கிறோம். 27 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 65,000 மீனவர்கள் வசிக்கும் நம் புதுவையில் மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர்கள் 13,000 பேர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2552 கிமீ சாலைகள். அதில் தேசிய நெடுஞ்சாலை சுமார் 64.5 கிமீ, நம் மாநில நெடுஞ்சாலை சுமார் 49 கிமீ. மாவட்டச் சாலைகள் 274.6 கிமீ. கிராமச் சாலைகள் 248 கிமீ.

புதுச்சேரியில் இளைஞர்கள் அதிகம். இன்றையப் புதுச்சேரி மக்களில் பலருக்குக் குடிப்பழக்கம் இல்லை. புதுச்சேரி உலக அளவில் உள்ள சிறந்தச் சுற்றுலாத் தளங்களுள் ஒன்று. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் ஆசிரமத்தையும், ஆரோவில்லையும் பார்க்கவருகிறார்கள். தென் தமிழகத்தில் புதுச்சேரியில் மதுவிலைக் குறைவு என்பதால் இளைஞர்கள் வார இறுதி நாட்களில் இங்கேப் படையெடுத்துவருகின்றனர். பாதுகாப்பான சுற்றுலாப் பகுதிகளில் இந்தியாவிலுள்ள சில நகரங்களில் நம் புதுச்சேரியும் ஒன்று. சமீபகாலமாக புதுச்சேரி கல்விக் கேந்திரமாக இருந்து வருகிறது.

எனது புதுச்சேரி என்ற எண்ணம் கொள்வோம்.
நமது வளர்ச்சி என்று வாழ்ந்துக் காட்டுவோம்.