Sunday, 27 November 2016
Monday, 7 November 2016
ஆரோவில் ஒரு கனவு
ஒரு கனவு (நன்றி: http://www.auroville.org/contents/4139)
பூமியில் எங்காவது எந்த நாடும் தனது என்று சொந்தம் கொண்டாட முடியாத ஓர் இடம் இருக்க வேண்டும். அங்கு நல்லெண்ணமுடையோர், உண்மையான ஆர்வமுடையோர் உலகக் குடிமக்களாய் பரம உண்மையின் ஆணை ஒன்றிற்கே கீழ்ப்படிந்து சுதந்திரமாக வாழக்கூடிய இடம்; மனிதனுடைய போர்க் குணங்களையெல்லாம் அவனுடைய துன்பத்திற்கும் அவல நிலைக்கும் காரணமாக இருப்பவைகளை வெல்வதற்கும், அவனுடைய பலவீனத்தையும் அஞ்ஞானத்தையும் வென்று மேற்செல்லவும், அங்கு ஆசைகளையும் உணர்ச்சி வெறிகளையும் திருப்தி செய்வதைக் காட்டிலும் பொருள் இன்பங்களையும் சிற்றின்பங்களையும் நாடுவதைக் காட்டிலும், ஆத்மாவின் தேவைகளுக்கும், முன்னேற்ற ஆர்வத்துக்கும் அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
அந்த இடத்தில் குழந்தைகள் தங்கள் ஆன்மாவுடன் இடையறாத தொடர்பு கொண்டு முழுமையாக வளரவும் முன்னேறவும் முடியும். அங்கு அளிக்கப்படும் கல்வி, தேர்வுகளில் வெற்றி அடைவதற்காகவோ, சான்றிதழ்கள் பெறுவதற்காகவோ, பதவிகள் கிடைப்பதற்காகவோ இருக்காது. அதற்குப் பதிலாக ஒருவரிடம் ஏற்கனவே இருக்கும் திறன்களை வளப்படுத்தவும், புதிய திறன்களை வெளிக்கொணர்வதற்கும் கல்வி அளிக்கப்படும். அங்கு பட்டங்கள், பதவிகளுக்குப் பதிலாக சேவை புரியவும், எல்லாவற்றையும் சீராய் அமைக்க கூடிய வாய்ப்புகள்மட்டுமே இருக்கும். அங்கு உடலுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொருவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி ஒன்று போல ஏற்பாடுகள் செய்யப்படும். அங்குள்ள பொது அமைப்பில் ஒருவரது புத்திக் கூர்மை, ஒழுக்க, ஆன்மிக மேன்மைகள் எல்லாம் வாழ்க்கை இன்பங்களையோ அதிகாரங்களையோ அதிகரிக்கப் பயன்படாது. அதற்குப் பதிலாக, அவ்வுயர்வுகளின் காரணமாக அவருடைய கடமைகளும், பொறுப்புகளும்அதிகமாகும். ஓவியம், சிற்பம், இசை, இலக்கியம் போன்ற எல்லா வகையான கலை வடிவங்களிலும் அழகை உணரும்வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். அவை தரும் இன்பத்தை அடைவது அவரவரது இரசனைத் திறனின்அளவைப் பொருத்து இருக்கும். அது அவர்களுடைய சமூக, பொருளாதார அந்தஸ்தைப் பொருத்து இருக்காது.
ஏனெனில், இந்த இலட்சிய பூமியில் பணம் தனிநாயகமாக இருக்காது. அங்கு ஒருவருடைய சொந்தத் திறமைக்குரிய மதிப்பு, பொருட் செல்வத்தினாலோ சமூக அந்தஸ்தினாலோ வரும் மதிப்பைவிட அதிக முக்கியத்துவம் பெறும். அங்குவேலை என்பது வயிற்றுப் பிழைப்புக்குரிய வழியாக இருக்காது. அதற்குப் பதிலாக அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும், தனது திறமைகளையும் சாத்தியக் கூறுகளையும் வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். அதே சமயம், அது சமூகம் முழுவதற்குமாகச் செய்யும் சேவையாகவும் இருக்கும். பதிலுக்கு சமூகம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைத் தேவைக்கும், வேலை செய்வதற்கான செயற்களத்துக்கும் வழி செய்யும். வழக்கமாக போட்டி, போராட்ட அடிப்படையில் உள்ள மனிதஉறவுகள், வேலைகளை ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாச் செய்யவும் ஒத்துழைக்கவும் தேவையான மனித நேய உறவுகளாக அங்கு இருக்கும்.
( ஸ்ரீ அன்னை -ஆகஸ்டு 1954-ஆம் ஆண்டில் எழுதியது.)
“ஆரோவில்லை ஒரு கனவு என்கிறாய். ஆமாம் அது ‘கனவு’தான். ஆனால் இறைவனின் ‘கனவு’. இக்கனவுகள் பொதுவாகஉண்மையாக மாறிவிடுகின்றன. யதார்த்தங்கள் என்றுமனிதர்கள் எவற்றைக் கருதுகிறார்களோ அவற்றைக்காட்டிலும் மிக உண்மையாக அவை ஆகிவிடுகின்றன”.
ஸ்ரீ அன்னை (20.05.1961)
Saturday, 5 November 2016
கற்கத் தவறிய பாடங்கள்
கற்கத் தவறிய பாடங்கள்-அ.ஜான்லூயி
(முன்னாள் இணை இயக்குநர், புதுவை மாநிலக் கல்வித்துறை)
மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு கல்வியின் குறிக்கோளும் மாறும். ஒரு நாடு பகைவர்களால்
சூழப்பட்டிருக்கும்போதும், ஒரு நாட்டில்
அமைதி தவழும்போதும் கல்வியின் இலக்கு ஒரே மாதிரியாக இருக்க முடியாது. கிறித்துப் பிறப்பதற்கு
முன்னம் ‘ஸ்பார்ட்டா’ நாட்டில் தாயின் மடியில்
பால் குடித்துத் தவழும் குழந்தைகளை அரசு வலிய எடுத்து, திடமற்ற
நோயுற்ற குழந்தைகளை மலை முகட்டிலிருந்து தூக்கி எறிந்து கொன்றுவிட்டு, வலிமை மிகுந்த குழந்தைகளுக்குக் கடுமையான உடற் பயிற்சி தந்தது எனப் படிக்கிறோம்.
அதே நேரத்தில் கிரேக்க நாட்டில், ஏதன்சு நகரத்தில் அமைதி தவழ்ந்ததால், அங்கு மக்கள் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதையும் அழகுச்சிலைகளை உருவாக்கியதையும், அதிசயக் கட்டடங்களைக் கட்டியதையும், சிந்தனையாளர்களைப்
படைத்ததையும் காண்கிறோம். உலகிலேயே முதன் முதலாக ஏதன்சு மாநகரில் மட்டுமே ஜனநாயக ஆட்சிமுறை
நடைமுறைப் படுத்தப்பட்டதையும் பார்க்கிறோம். ஸ்பார்ட்டா தேசத்தில் கல்வி அமைப்பு, போர் வீரர்களைப் படைத்தது. ஆனால், ஏதன்சு நகரத்தின்
கல்வி முறையோ ஒரு சாக்ரட்டீசையும், அரிஸ்டாட்டிலையும், பிளேட்டோவையும் படைத்தது.
சோவியத் ரஷ்யாவின் கல்வி
நோக்கமும் அமெரிக்காவின் கல்வி எதிர்பார்ப்புகளும் ஒன்றாக இருக்க முடியாது. ‘வாதிக்கன்’
பிரதேசக் கல்வியும், ஈரான் நாட்டின் இன்றைய கல்வியும் ஒத்திருக்க
முடியாது. மன்னராட்சியில் இருக்கும் கல்வி சித்தாந்தம், கம்பன்
காலத்துச் சித்தாந்தத்திலிருந்து மாறுபட்டு இருப்பதில் வியப்பொன்றுமில்லை. நம் நாட்டில்கூட
முந்தைய காலத்துக் குருகுல முறைக் கல்வி நாம் வாழும் இக்காலத்திற்கு ஒத்து வருவதில்லை.
துரோணாச்சாரியாரின் வில் வித்தையை இன்று யாரும் கற்பதில்லை. காரணம்; அதற்கு அவசியம் இல்லை. இலத்தீனும், கிரேக்கமும் ஹிப்ருவும், சமஸ்கிருதமும் வழக்கொழிந்த மொழிகளாகப் போனதால் யாரும் அவற்றைக் கட்டாயப் படுத்தப்
போவதில்லை. காரணம் அவை தேவையில்லாமற் போய்விட்டன. வில்வித்தையை மறந்துவிட்டுக் குழந்தைகளுக்குக்
கம்யூட்டர் கல்வி போதிக்கின்றோம். ஆங்கிலக் கல்வியை வலியுறுத்துகிறோம். இது காலத்தின்
கட்டாயம்.
நான் படித்த காலத்துத்
தலைமுறையினர் சுற்றுப்புறச் சூழல் கல்வி படித்ததில்லை. ஆனால். இன்று பள்ளி செல்லும்
குழந்தைகள் இவைகளைக் கட்டாயப் பாடமாகப் பயில்கின்றனர். காரணம்; இன்று என்று மிலாத அளவிற்குச் சுற்றுப்
புறச்சூழல் மாசு பட்டிருப்பதாலும், நாம் கட்டிக் காத்த நாகரிகம்
மக்கட் பெருக்க வெள்ளத்தால் அழிந்து படும் அபாயத்தில் இருப்பதாலும் இத்தகைய கல்வி தேவைப்படுகிறது.
எனவே, கல்வியின் நோக்கமும் உள்ளடக்கமும்
காலத்திற்கேற்ப மாறும்; மாறத்தான் வேண்டும்.
- ‘கற்கத் தவறிய பாடங்கள்’ (பக் 2.) அ.ஜான்லூயி, புதுவை மாநிலக் கல்வித்துறை முன்னாள்
இணை இயக்குநர்.
Subscribe to:
Comments (Atom)

